Tuesday, September 24, 2024

சீமான் மீது வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் காவல்துறையினரால் தென்காசி மாவட்டத்தில் முன்னதாக கைது செய்யப்பட்டார்,

இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காகப் பாய்கிறது.

கருணாநிதி குறித்தப் பாடலை மேடையில் பாடியதற்காகக் கைது செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலைப் எழுதியவர், பாடியவரைக் கைது செய்தார்களா? இப்போது நான் அந்தப் பாடலைப் பாடுகிறேன். என்மேல் வழக்குப்பதிவு செய்யுங்கள்” என்று கூறிய சீமான் கருணாநிதி குறித்த அவதூறுப் பாடலை பத்திரிகையாளர்கள் முன்பு பாடிக் காட்டினார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து அஜேஷ் என்பவர் பட்டபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அஜேஷ் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கதாத நிலையில், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திடம் சீமான் குறித்து அவர் புகார் அளித்தார்.

அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மணிப்பூருக்கு எப்போது செல்வார்? -காங். விமர்சனம்

சீமான் அவதூறாகப் பேசியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு மாநில எஸ்.சி., எஸ்.சி. ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் உத்தரவின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் காவல் துறையினர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சீமான் வழக்கின் விசாரணை அதிகாரியாக பட்டபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரி சுரேஷ் குமார் சீமான் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024