சென்னையில் 10 மின்மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இடங்களில் சீரான மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பிறகு, சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுடன் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது,
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டோருக்கு – நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு இரவு உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
300 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேம்பாலத்தில் கார்களை நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அரசுக்கு ஒத்துழைப்பு
சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்படுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
10 மின்மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சீரான மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சென்னையில் 14 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு!
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆவின் பால் தங்குதடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என உதயநிதி குறிப்பிட்டார்.