Wednesday, September 25, 2024

சூட்கேஸில் குழந்தை உடல்: டிவி நிகழ்ச்சியைப் பார்த்து மகளைக் கொன்ற பெண் கைது!

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

பாட்னா: பிகார் மாநிலம் முஸாஃபர்நகரில், ஒரு சூட்கேஸில், குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரைம் நிகழ்ச்சியைப் பார்த்து தனது 3 வயது மகளைக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில், கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் பெயர் காஜல் என்பதும், அவர் தனது கணவரை விட்டுப் பிரிந்துசென்று காதலனுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அவரது காதலனோ, காஜலின் மூன்று வயது மகளை உடன் அழைத்து வர ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், தனது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் போட்டு குப்பையில் வீசியிருக்கிறார் காஜல்.

வார்த்தைகளால் பதில் சொல்லி எதிர்பார்த்த வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டாம்: மு.க. ஸ்டாலின்

கிரைம் பாட்ரோல் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குற்றங்களின் பின்னணி தொடர்பான நிகழ்ச்சியைப் பார்த்தே, மகளைக் கொலை செய்வது என திட்டமிட்டதாக, முதற்கட்ட விசாரணையில் காஜல் கூறியிருக்கிறார்.

முஸாஃபர்நகர் அருகே, மினாபூர் பகுதியில் சனிக்கிழமையன்று சிவப்பு நிற சூட்கேஸில், ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

இதையடுத்து, குழந்தையின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அது 3 வயதாகும் மிஸ்தி என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது வீட்டை கண்டுபிடித்த காவல்துறையினர், அந்த வீட்டின் தரை மற்றும் பாத்திரங்களைத் தேய்க்கும் சிங்கில் ரத்தக் கறை இருந்ததைக் கண்டறிந்தனர்.

மிஸ்தியின் தாய், சம்பவம் நடந்தது முதல் காணாமல் போனது தெரிய வந்திருப்பதாகவும், அவரது தந்தைக்கு போன் செய்தபோது, அவர் தனது உறவினர் வீட்டில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே, மிஸ்தியின் தந்தை மனோஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காஜலின் இருப்பிடத்தை அவரது செல்ஃபோன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர். பிறகு அங்குச் சென்று பார்த்தபோது அவர் தனது காதலன் வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது.

அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமணத்துக்கு மீறிய உறவு வைத்திருந்த காஜல், கணவரை விட்டுவிட்டு காதலனுடன் வாழ விரும்பியிருக்கிறார். முதலில், தனது மகளையும் உடன் அழைத்துச் செல்லவே நினைத்திருக்கிறார். ஆனால், மகள் உடன் வருவதை அவரது காதலன் விரும்பாததால், என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது, தொலைக்காட்சியில் வரும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான நிகழ்ச்சியைப் பார்த்து, தனது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் வைத்து குப்பையில் வீசியிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

கொலை செய்ததை மறைக்க, தனது வீடு முழுவதும் இருந்த ரத்தக் கறையை அவர் சுத்தமாகத் துடைத்து எடுத்துவிட்டு, வீட்டிலிருந்து கிளம்பி காதலன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவர் தனியாகவே இந்தக் கொலையை செய்துள்ளார். தொலைக்காட்சியில் கிரைம் நிகழ்ச்சிகள் பார்த்து அதன் மூலம் அவர் கொலை செய்ததாகக் கூறியிருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் காதலனுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

You may also like

© RajTamil Network – 2024