செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 50-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 50-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 50-வது முறையாக இன்று வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் பணி பெற்று தருவதாக பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் ஜாமீன் கிடைக்காமல் புழல் சிறையில் உள்ளார். ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிசெந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் தள்ளுபடிசெய்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஜூலை 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினமும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சென்றதால், இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்றும், விடுபட்டுப்போன வங்கி கவரிங் லெட்டர் போன்ற ஆவணங்களை வழங்குமாறும் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி அல்லி முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, 2 மனுக்களுக்கும் பதில்மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த புதிய மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் நேற்றுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது நீதிமன்ற காவலை 50-வது முறையாக இன்று வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!

சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே… சிவாங்கி வர்மா!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்