அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் சீன சந்தைகளின் பக்கம் திரும்பியதையடுத்து இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனையடுத்து இன்றைய வர்த்தகத்தில் வங்கி மற்றும் உலோக பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்ததால் சென்செக்ஸ் 602 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 158 புள்ளிகள் உயர்ந்து நிறைவுற்றது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 602.75 புள்ளிகள் உயர்ந்து 80,005.04 புள்ளிகளாகவும் நிஃப்டி 158.35 புள்ளிகள் உயர்ந்து 24,339.15-ஆக நிறைவுற்றது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஐசிஐசிஐ வங்கி, எய்ச்சர் மோட்டார்ஸ், விப்ரோ, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
அதே வேளையில் கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
இதையும் படிக்க: தீபாவளி.. சந்தைகளில் திருவிழாக் கூட்டம்; ஆனால் சூடுபிடிக்காத விற்பனை! காரணம்?
செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி 14.5% வளர்ச்சியை பதிவு செய்ததையடுத்து டாப் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் பட்டியலில் 3 சதவிகிதம் உயர்ந்து ரூ.11,746 கோடியாக முடிந்தது.
பொதுத்துறை வங்கி குறியீடு 3.8 சதவிகிதமும், மெட்டல் துறை குறியீடு 2.5 சதவிகிதமும், பார்மா, மீடியா, ரியாலிட்டி தலா 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதமும் உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் இன்று உயர்ந்து முடிந்தது.
அனுப் இன்ஜினியரிங், கார்டிரேட் டெக், சிக்னிட்டி டெக்னாலஜிஸ், கோஃபோர்ஜ், தீபக் ஃபெர்டிலியர்ஸ், ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ், கிர்லோஸ்கர் நியூமேடிக், பாலி மெடிக்யூர், ஷார்தா கிராப், தைரோகேர் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் 52 வார உச்சத்தை எட்டியது.