சென்னையில் 800 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்
சென்னை: சென்னை செனாய் நகர் பகுதியில் கடைகளுக்கு அழுகிய இறைச்சி விநியோகிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று செனாய் நகரில் அருணாச்சலம் தெருவில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு அழுகிய நிலையில்மாட்டிறைச்சி தரமற்ற முறையில் பெட்டிகளில் அடைத்து வைத்திருப்பதும், இறைச்சி முழுவதும் எறும்பு, ஈக்கள்மொய்த்த நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவற்றில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அத்துடன் 800கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பதற்காக சென்னைமாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாட்டிறைச்சி விற்கப்பட்ட 28 கடைகளில் அவற்றை சமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.சுகாதாரமற்ற முறையில் அழுகிய இறைச்சியை விற்ற நபரின் வீட்டுக்கு சீல் வைத்த நிலையில், அவரை சேத்துப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.