சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளையும் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால், சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க : வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!
இந்த நிலையில், ரயில் சேவை குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களில் இருந்தும் காலை 5 மணிக்கு முதல் ரயிலும் இரவு 11 மணிக்கு கடைசி ரயிலும் இயக்கப்படும்.
நாள்தோறும் 42 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 47 ரயில்கள் இயக்கப்படுகிறது.
பச்சை நிற வழித்தடத்தில் (சென்ட்ரல் – பரங்கிமலை) 5 நிமிடத்துக்கு ஒரு ரயிலும்,
நீல நிற வழித்தடத்தில் (விமான நிலையம் – விம்கோ நகர்) 6 நிமிடத்துக்கு ஒரு ரயிலும்,
வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் வரையில் 3 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயணிகள் பயன்படுத்தி, இதற்கேற்ப திட்டமிடலை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”