Tuesday, October 22, 2024

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தீபாவளிக்கு 14,086 பேருந்து இயக்கம்: 1.02 லட்சம் பேர் முன்பதிவு

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தீபாவளிக்கு 14,086 பேருந்து இயக்கம்: 1.02 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சொந்தஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம்அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி, போக்குவரத்து ஆணையர், சிஎம்டிஏ, காவல், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் 3 நாட்களுக்கு முன்பாகவே சொந்த ஊர்களுக்கு பயணிக்க வசதியாக 14,086 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக, 4,900 சிறப்பு பேருந்துகள் என 11,176 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்த பிறகு, பிறஊர்களில் இருந்து நவ.2 முதல்4 வரை சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக 3,165 பேருந்துகள் மற்றும் பிற முக்கிய ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு 3,165 என 12,606 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரைசாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரமாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம்,கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் 7, கோயம்பேட்டில் 2 என 9 முன்பதிவு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 1.02 லட்சம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு 1.10 லட்சம் பேர் முன்பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு 1.20 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறைகள்: பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியவும், புகார்களை தெரிவிக்கவும், 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். புதிதாக ஆம்னி பேருந்துகளை இயக்குபவர்கள்தான் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் தெடர்பான புகாருக்கு 1800 425 6151, மற்றும் 044-24749002, 26280445, 26281611 என்ற எண்களில் தெரிவிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம், மாதவரத்துக்கு 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர், பூந்தமல்லி, அடையாறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள்: ‘‘தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம். வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே கட்டணத்தை தரலாம். ‘அரசு ஏற்பாடு செய்தது’ என அந்த பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்’’ என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவதை சிஐடியு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘மக்கள் நலன் குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை. பண்டிகைக்காக மாநிலத்தின் வேறு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதால் ஒரு கி.மீ.க்கு ரூ.90 என இயக்க கட்டணம் அதிகரிக்கும். ஆனால், தனியார் பேருந்துகளுக்கு ரூ.51.25 மட்டுமே தரப்படும். தனியார்மயம் என்கின்றனர். அப்படியானால் 7,200 புதிய பேருந்துகள், புதிய நடத்துநர்கள், ஓட்டுநர்களை அரசு ஏன் நியமிக்க வேண்டும். அரசியலுக்காக இவ்வாறு குற்றம்சாட்டுகின்றனர்’’ என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024