ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்தில் பங்கேற்பதற்காக பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (செப். 10) ஜாமீன் வழங்கியது.
இதன்மூலம் அக்டோபர் 2ஆம் தேதி வரை அவர் தனது அவாமி இதிஹாத் கட்சி (ஏஐபி) வேட்பாளர்களை அதரித்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குகிறது. செப்டம்பர் 25 இரண்டாம் கட்டமும், அக்டோபர் 8 – மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசாரத்தில் ஈடுபட ஜாமீன்
ஜம்மு – காஷ்மீரில் அவாமி இதிஹாத் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக என்ஜினியர் ரஷீத் எனப்படும் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் கேட்டு ரஷீத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி சந்தர் ஜித் சிங், அக்டோபர் 2ஆம் தேதி வரை ரஷீத்துக்கு ஜாமீன் வழங்குவதாகவும், அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் சரண்டைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வந்தே பாரத்தை சுத்தியலால் உடைத்த இளைஞர்! எங்கே?
மேலும், ரஷீத்துக்கு ஜாமீன் வழங்குவது குறித்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்று கருத்துகள் இருந்தால் அதனை அறிக்கையாக தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தினார். தேசிய புலனாய்வு முகமையின் அறிக்கைக்குப் பிறகு ரஷீத்துக்கு ஜாமீன் வழங்கு நீதிபதி உத்தரவிட்டார்.
யார் இந்த என்ஜினியர் ரஷீத்?
கடந்த 2019-ஆம் ஆண்டு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் என்ஜினியர் ரஷீத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. தற்போது ரஷீத் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2008, 2014-ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லங்கேட் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு ரஷீத் வெற்றிபெற்றார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ரஷீத், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை சிறையில் இருந்தபடியே வீழ்த்தி எம்.பி.யாக பதவியேற்றுள்ளார்.