ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில்(ஜேஎம்எம்)’ இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவராக அறியப்பட்ட சம்பயி சோரன், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியதுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். தனக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கட்சியில் தரப்படவில்லை என்பதே அவரது முக்கியக் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 66 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று(அக். 19) வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பயி சோரன் சராய்கேலா (எஸ்.டி. தொகுதி) தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி – தன்வார் தொகுதியிலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரரின் மனைவியான சீதா சோரன் ஜாம்தாரா தொகுதியிலும் பாஜக வேட்பாளராகப் களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்ஷன் பாகத்துக்கும் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.