ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 35 வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியிலும், அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.
முதல்கட்ட தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஹேமந்த் சோரன் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். அவர் 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியாளரான சைமன் மால்டோவைவிட 25,740 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
அவரது மனைவி கல்பனா சோரன், காண்டே இடைத்தேர்தலில் பாஜகவின் திலீப் குமார் வர்மாவைவிட 27,149 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
ஜேஎம்எம் அறிவித்துள்ள 35 வேட்பாளர்களில், ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவிலும், ஜார்க்கண்ட் பேரவைத்தலைவர் ரவீந்திரநாத் மஹ்தோ நாலாவிலும், அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர் கர்வாவிலும், சோனு சுதிவ்யா கிரிதியிலும், பெபி தேவி தும்ரியிலும் போட்டியிட உள்ளனர்.