டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் நவம்பர் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று, தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

அப்போது, வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்கள் மற்றும் செடிகளை அகற்றுவது தொடர்பாக சுற்றுச் சூழல் துறைச் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வனப் பகுதிகளில் உள்ள இதுபோன்ற மரங்களை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தினால், வயநாட்டில் நடந்ததுபோல நிலச்சரிவு அபாயம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “அந்நிய மரங்களை இதுவரை அகற்ற நடவடிக்கை எடுத்துவிட்டு, தற்போது வயநாடு சம்பவத்தைக் காரணம் காட்டி பின்வாங்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறைச் செயலர் அரசியல்வாதியைப்போல செயல்படக்கூடாது.

அவர் அரசியல் செய்ய விரும்பினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது. வேகமாக வளரும் அந்நிய மரங்களால்தான் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. யானைகள், காட்டெருமைகள் பலியாவது வேதனையளிக்கிறது. இவற்றைத் தடுக்க வேண்டும்”என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

பின்னர், டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “தற்போது 9 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் இறுதிக்குள் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்” என்றார்.

டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில், “ஏற்கெனவே டாஸ்மாக் ஊழியர்கள் 10 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர். காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தால் கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிச.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024