டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து, உலகின் 7ஆம் நிலை வீராங்கனையான சீனாவைச் சேர்ந்த ஹான் யூ உடன் மோதினார். பி.வி. சிந்து 18ஆம் நிலை வீராங்கனையாவார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி, சுமார் ஒரு மணிநேரம் மூன்று நிமிடங்கள் நீடித்தது. இந்த ஆட்டத்தில், 8-21, 21-12, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் ஹான் யூவை வீழ்த்தி, பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.
இதன்மூலம் டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.
இதையும் படிக்க | தில்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!
முன்னதாக, பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை, மலேசியா இணையிடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.