டெவோன் கான்வே அரைசதத்தால் நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்டிங் வரிசை நியூஸிலாந்து அணியின் வேகத்தில் சிக்கி சீர்குலைந்தது. இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மேலும் 5 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியினர் தடுமாறிய ஆடுகளத்தில் நியூஸிலாந்து வீரர் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் நியூஸிலாந்து கேப்டன் டாம் லதாம் 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவருக்குப் பின் வந்த வில் யங் டெவோன் கான்வேவுக்கு நன்கு ஒத்துழைப்பளித்தார்.
வில் யங் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெவோன் கான்வே 11 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்ட நேரம் முடிவில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டேரில் மிட்சல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் நாளை(அக்.18) நடக்கிறது.