டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று (அக்டோபர் 21) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டேன் பிட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?
300 விக்கெட்டுகள்
இந்தப் போட்டியில் ககிசோ ரபாடா அவரது முதல் விக்கெட்டினை கைப்பற்றியபோது, தென்னாப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்தார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் ககிசோ ரபாடா. தென்னாப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6-வது வீரராக ரபாடா மாறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்
டேல் ஸ்டெயின் – 439 விக்கெட்டுகள் (93 போட்டிகளில்)
ஷான் பொல்லக் – 421 விக்கெட்டுகள் (108 போட்டிகளில்)
மக்காயா நிட்னி – 390 விக்கெட்டுகள் (101 போட்டிகளில்)
ஆலன் டொனால்டு – 330 விக்கெட்டுகள் (72 போட்டிகளில்)
மோர்னே மோர்க்கல் – 309 விக்கெட்டுகள் (86 போட்டிகளில்)
ககிசோ ரபாடா – 303* விக்கெட்டுகள் (65 போட்டிகளில்)
இதையும் படிக்க: தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்
தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையையும் ககிசோ ரபாடா பெற்றுள்ளார். அவர் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு முன்னதாக, டேல் ஸ்டெயின் 61 போட்டிகளிலும், ஆலன் டொனால்டு 63 போட்டிகளிலும் இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.