Monday, September 23, 2024

ட்ரோன் தாக்குதல் எதிரொலி: மணிப்பூரில் ஊரடங்கு அமல்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் அண்மையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.

இதையடுத்து ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருவதால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(செப். 10) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் இன்று(செப். 10) அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதால் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மேற்கண்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024