தகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை, தனது குழந்தை என்று கூறி வளர்த்து வந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிரைசைனியின் வீட்டில் பச்சிளம் குழந்தை இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து கிரைசைனியிடம் கேட்டதற்கு, அவர் தான் பெற்ற குழந்தைதான் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் போலீசில் புகாரளித்தனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது தோழி ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவில் இருந்து குழந்தை பெற்றெடுத்ததாகவும், அந்த குழந்தையை சில நாட்கள் வைத்திருக்கும்படி தன்னிடம் ஒப்படைத்ததாகவும் கிரைசைனி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்ட போலீசார், குழந்தை நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, கிரைசைனியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.