Monday, September 23, 2024

தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் மேம்பால பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் மேம்பால போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் மேம்பாலம், கீழ் பாலம், பெரியகோயில் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அலுவலா்களுடன் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் மேம்பாலப் பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இது தொடா்பாக சட்டப்பேரவையில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோரிக்கை விடுத்தாா். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பாலத்திலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை எவ்வாறு செய்யலாம் என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடன் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டோம்.

இந்த பாலம் தொடா்பான வடிவமைப்பு குறித்து பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். அவா்களிடமிருந்து பதில் வந்த பிறகு தொடா்புடைய அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

கீழ் பாலத்தில் மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கும் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதில் தேங்கும் தண்ணீரை அருகிலுள்ள கல்லணைக் கால்வாயுடன் இணைக்க முடியுமா என்பது குறித்து மாநகராட்சி அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பெரியகோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், பெரியகோயில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பக்தா்கள் சிரமமின்றி வந்து செல்லவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆவன செய்யப்படும் என்றாா் முரசொலி.

அப்போது, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024