Tuesday, September 24, 2024

தடைகளைத் தவிடு பொடியாக்கும் விக்னேஸ்வரன்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கலியுகத்தில் இயற்கை சீற்றம் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் முயற்சியில் தடை, செயலில் தடுமாற்றம், அச்சுறுத்தும் நோய்கள், நம்பியவர்களால் ஏமாற்றம், திருமணப் பந்தத்தில் ஒருவித பயம், மனநிறைவில்லா நிலை, மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத வறுமை, இதற்கிடையில் போட்டி, பொறாமை, கடைசியில் இந்த அற்ப வாழ்க்கை ஏன் என்ற புரியா நிலை.

ஒரு சிலருக்கு சந்தோஷம் என்பது ஒருசில நாள்களுக்கு மட்டுமே நிலைக்கிறது. ஒருவரின் ஆயுளை மட்டும் நம்மால் நிர்ணயிப்பது கடினம். நம்முடைய கர்மவினை, வாழ்வியல் தேடல் மற்றும் அவற்றுக்கான வழியைக் காணக் கடவுள் மட்டுமே நமக்கு உதவ முடியும். அந்த கடவுள் யார் என்பதை அவரவர் உணர வேண்டும். அதற்கான ஒருசில தீர்வுகளையும் வழியையும் நம்முடைய ஆதிமூலத்தின் வழியே பெறமுடியும்.

ஒரு மனிதன் எவ்வளவுதான் தன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக முயற்சி செய்தாலும் ஒரு இருள் மற்றும் தடை நம்மைச் சூழும். அந்த ஒளியில்லா காரிருள் கொண்டு மறைப்பவன் சனி, நமக்கான தனித்துவத்தை மாயமாக்குபவன் ராகு கேது. இந்த கிரகங்களால் ஏற்படும் தோஷத்தைப் பொடிப்பொடியாக்கும் சூட்சுமம் நம் ஞான முழுமுதல் கடவுளான பிள்ளையாருக்கு உண்டு. இவரை சிவன் கோயிலில் விநாயகராகவும், விஷ்ணு கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராகவும் இருப்பார். நாம் முதலில் இவரை வழிபட்டு பின்பு மற்ற கடவுளை வணங்குவோம்.

நம்முடைய அனைத்து மங்கள நிகழ்ச்சியிலும் ஆதி முதல்வன் இல்லாமல் நம்மால் துவங்கவே முடியாது. அதேபோல் நம்முடைய முன்னோர்களின் கர்ம காரியங்களை விநாயகர் துணை கொண்டுதான் முடித்து வைப்பார்கள். இன்றும் பல்வேறு கோயில்களில் விநாயகர் துணையுடன் கர்ம காரியங்கள் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக சென்னையில் உள்ள மத்திய கைலாஷ், திருவாரூர் பூந்தோட்டத்தில் உள்ள திலதர்ப்பணபுரி ஆதிவிநாயகர் கோயில் பித்ரு கர்மா செய்யப்படுகிறது.

தனிஷ்டா பஞ்சமியும், பரிகாரமும்!

ஒரு மனிதனின் பிறப்பு ஜாதகத்தில் கர்ம காரகன் சனி, அசுப கிரகங்கள் தொடர்புகொள்ளும் பொழுது தோஷத்தை ஏற்படுத்தி, வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்குத் தடையை ஏற்படுத்துவார். முக்கியமாக சனிக்கும் ராகு கேதுவுக்கும் பகைவர்கள் என்றால் சூரியன், சந்திரன், மற்றும் செவ்வாய் ஆவார். இவர்கள் சுப செயல்களைத் தடுத்து நிறுத்துவதில் வல்லவர்கள். எடுத்துக்காட்டாக சனி சந்திரன் சேர்க்கை இருந்தாலும் நிச்சயித்த திருமணம் கடைசி வரை சென்று, ஒருசில காரணத்தினால் தடை ஏற்படும்.

இந்த சனி சந்திரன் சேர்க்கை உள்ளவர்கள் எப்பொழுதும் மனதில் தெளிவு இல்லாமல் குழம்பிய நிலையும், சமூகத்தில் கலகலப்பு இல்லாமல், சுற்றத்தாரையும் குழப்பும் தன்மை, மனச் சஞ்சலம், சந்தேகம், மற்றவர்களோடு சகஜமாகப் பழக முடியாத நிலை, யாரிடமும் ஆலோசனை கேட்க முடியாத நிர்ப்பந்தம், தன்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளும் தன்மை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

களத்திரத்தில் இந்த தோஷம் வலிமையாக இருந்தால் கணவன் – மனைவி பிரிவைக் கொடுத்து தனிமையில் உட்கார வைக்கும். அது தவிர தொழிலில் அவ்வப்பொழுது தடுமாற்றம் ஏற்படுத்தும். முக்கியமாக சனிப்பெயர்ச்சியில் அல்லது சனி திசை அல்லது சனி புத்தியில் ஏற்படும் புதிய நற்செயல்களில் தீரா பிரச்னைகளை பொடி பொடியாக்கி நல்வழி காட்டுபவர் விக்ன விநாயகர்.

ராகு – கேது பிடிக்குள் சிக்கியிருக்கும் கிரகங்கள்

சனிக்கு அடுத்து தடையைக் கொடுப்பவர்கள் என்றால் கேதுவும், அதற்கடுத்து ராகு ஆவார். இவர்கள் லக்கினம், களத்திரம், மாங்கல்ய ஸ்தானத்தில், அஷ்டமத்தில், குடும்ப பாவத்தில் இருந்தால் தோஷத்தை அதிகம் ஏற்படுத்துவார்கள். இந்த தோஷம் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப கூடக்குறைய இருக்கும். இந்த வகையான சர்ப்ப தோஷம் ஒருவரை உயர விடாமல் தடுக்கச் செய்யும், திருமணத்தடை, குழந்தைப்பேற்றில் பிரச்னை, சராசரி வாழ்க்கை வாழக்கூடத் தடை, சிலரை உயிரைப் பறிக்கும் நிலைக்கு எடுத்து செல்லவைக்கும். சனி தர்மவான், ஆனால் சாயா கிரங்கங்கள் அப்படி கிடையாது தர்ம நியத்திற்குக் கட்டுப்படாதவர்கள். ஜாதகத்தில் முக்கியமாக ராகு – கேது பிடிக்குள் மாட்டிக்கொள்ளும் கிரகங்கள், அவர்களின் குறிப்பிட்ட தசா புத்தி காலத்தில் ஒருவரின் சுபகாரிய செயல்களின் தடையை ஏற்படுத்துபவர்கள். அன்றைய காலகட்டத்தில் சுப நிகழ்ச்சிகளைச் செய்யாமல் இருப்பது நன்று. இவற்றில் முதல் முக்கியமானவர் சனியும் கேதுவும் ஆவார்.

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

இவர்களால் ஏற்படும் தடைகளை அகற்றி வெற்றிவாகை சூட விநாயகர் உதவி நமக்குத் தேவை. பிள்ளையார் ராகு-கேதுவான பாம்பை தன்னுடைய பூணலாக அணிந்து நாக யக்ஞோபவீத கணபதியாக வீற்றிருக்கிறார். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் காரியத் தடை மற்றும் பிரச்னைகளை தீர்க்க சரியான வழியைக் காட்டுபவர் இந்த நாக கணபதி. உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில், மூலாதார சக்தியான குண்டலினி, நாக வடிவில் இருக்கும் இந்த பகவானை வணங்குவது நன்று. நம் விநாயகரே பஞ்சபூத சக்தி இயக்கத்தின் முழு முதல் கடவுள். நம்பிக்கை கூறிய தும்பிக்கை வேந்தன் நம்முடன் இருக்கிறார் என்று எவன் மனதார நினைக்கிறானோ அவன் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கடின முயற்சியுடன் கூடிய வெற்றி உங்களை வந்து சேரும் என்பது சூட்சும விதி.

வெற்றியின் வழி பிள்ளையார் வழிபாடு

இந்த பிரபஞ்சமும் ஜீவராசிகளும் பிரணவத்திலிருந்துதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தின் மூல கடவுள் விநாயகர். சாந்தமான ஆனைமுக உருவமும், வளைந்த தும்பிக்கை, அனைவரின் குறைகளைக் கேட்க பெரிய காதுகள் கொண்ட அவரின் அழகிய உருவத்தை ஒன்று சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே காட்சியளிக்கின்றார். தேய்பிறையில் வரும் சதுர்த்தி பரிகாரத்துக்கு சிறந்த காலம், அவற்றில் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை மஹா சங்கட சதுர்த்தி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அன்று குரோதி வருடம், ஆவணி 22, (7.9.2024) சனிக்கிழமை கூடிய வளர்பிறை சதுர்த்தி அன்று அவரை பூஜித்தால் அனைவரின் கஷ்டங்களைத் தடைகளையும் அகற்ற ஒரு அரிய வழி கிட்டும்.

துல்லியமாகச் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்!

ஏழரைச் சனியின் பாதிக்கப்படும் அனைத்து ராசிக்காரர்களுக்கும், இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஒரு சரியான நற்பாதைக்கான வழியைக் காட்டும். ஏழை எளியவரும் பூஜிக்கும் அளவிற்குப் பிள்ளையார் எளிமையானவர். அவரை மனையில் கோலமிட்டு அதன்மேல் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, முடிந்தால் களிமண் பிள்ளையார் வாங்கி, மாவிலை தோரணம் கட்டி, வெள்ளெருக்கு மாலை அணிவித்து, அருகம்புல் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து, அவருக்குப் பிடித்த வெல்லக் கொழுக்கட்டை, பால், பருப்பு பாயசம், அப்பம், பழம், சுண்டல் அனைத்தும் படைத்தது, உங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்களைக் கொண்டு பூஜித்து, அந்த பிரசாதத்தை அனைவருக்கும், முக்கியமாக இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் நன்று. மூஷிக விநாயகரை சந்தோஷப்படுத்தினால் நவகோள்களின் தடைகளும் நம்மை விட்டு அகலும்.

“மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே”.

வீடு யோகம் இல்லாதவருக்கு ஐந்து வருடத்திற்குள் வீடு வாங்குவார்கள். அதற்கு ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தேவியின் அனுக்கிரகம் கொண்ட மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வழிபட வேண்டும். இந்த ஐந்து வருடத்திற்குள் பூஜை செய்துவரும் ஒவ்வொரு பிள்ளையாரையும் தனியாகப் பூஜை அறையில் ஒரே மரப்பலகையில் வரிசையாக அமர வைத்துப் பூஜிக்க வேண்டும்.

வீடு கட்டும் யோகம் ஓரிரு வருடத்திற்குள் கட்டாயம் அமையும். ஐந்து வருடம் சேர்த்த பிள்ளையாரையும் கடல் மற்றும் குளத்தில் கரைத்து விட வேண்டும். முக்கியமாக நோயின் தாக்கம் அதிகமாக ஒருவருக்கு இருந்தால், ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சங்கட சதுர்த்தி அன்று வெல்லத்தால் விநாயகர் பிடித்து பூஜை செய்து, அந்த விநாயகரை ஓடும் ஆற்று நீரில் கரைத்து விட வேண்டும். இந்த வழிபாடு நோயின் தாக்கம் சிறிது சிறிதாகக் குறைக்கப்படும்.

Whatsapp:8939115647

[email protected]

You may also like

© RajTamil Network – 2024