தமிழக மீனவர்கள் கைது: வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு! தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடித்து விட்டு அதிகாலை கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீனவர்கள் 22 பேரை கைது செய்தனர். அத்துடன் மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்து திங்கள்கிழமை(ஜூன் 24) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேசுவரம் மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(ஜூன் 23) நள்ளிரவு முதல் ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இலங்கை கடற்படையால் நிகழாண்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.