தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தூர்தர்ஷன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
’’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர், ஒரு வரியை தவறவிட்டு விட்டார்.
கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை, வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை.
இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நன்றி’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தேதியும் இல்லை, கையெழுத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.