Saturday, October 26, 2024

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க  உத்தரவு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த பா.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். அப்போது 7- வது நாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கந்த சஷ்டி விழாவின் போது தினமும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள். சூரசம்ஹாரம் அன்று கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். திருச்செந்தூர் கோயிலில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15,000 முதல் 16,000 பக்தர்கள் தான் சாமி தரிசனம் செய்ய முடியும். சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனமாக ஒரு நபருக்கு ரூ. 100 கட்டணமாக வசூல் செய்கிறார்கள். அதுவே, கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் கட்டணமாக ரூ. 200 நிர்ணயம் செய்துள்ளார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 1,000, விஸ்வரூப தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 2,000 மற்றும் அபிஷேகம் தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 3,000 வசூல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த கட்டண உயர்வு கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை அமல்படுத்தவில்லை.

கடந்த 2023-ம் ஆண்டு கந்த சஷ்டியின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. விரைவு வரிசைக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 1,000 வசூல் செய்தனர். பக்தர்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் சுமார் 200 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது.

கடந்த 18.09.2024 அன்று திருக்கோயில் உள்துறை அலுவலக சுவற்றில் ஆணையர் மற்றும் தக்கார் பெயரில் அவர்கள் கையொப்பம் இல்லாத அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில், வருகிற கந்த சஷ்டியின் போது கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவு வரிசை தரிசனக் கட்டணம் ஒரு நபர்க்கு ரூ. 1,000- வசூல் செய்ய உள்ளதாகவும் அது குறித்து ஆட்சேபணைகள் அளிக்க 03.10.2024 அன்று இறுதி நாள் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த இவ்வாறு தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது தவறு.

எனவே, கந்த சஷ்டி விழாவின் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவும், அது தொடர்பான 2018-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்வதுடன், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க திருப்பதியில் உள்ளவாறு விஸ்வரூபம் தரிசனம், அபிஷேகம் தரிசனம், கட்டணமில்லாத தரிசனம், விரைவு தரிசனங்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு முன் கூட்டியே டோக்கன் அளிக்கவும், கோயில் வளாகத்தில் தரிசன டோக்கன் அளிக்க ஐந்து இடங்களிலாவது தனி கவுன்டர்கள் திறக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று (அக்,24) விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக 2 வாரத்தில் அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஓத்திவைத்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024