திருட சென்ற வீட்டில் தூக்கம்.. தட்டி எழுப்பி கைது செய்த போலீசார்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கோவை,

கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் ராஜன்(வயது 53), வியாபாரி. இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ளார். இதனால் ராஜன் தனது மனைவியை வாரத்துக்கு ஒருமுறை பார்த்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியை பார்க்க சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருள் சூழ்ந்து இருந்தது. உடனே அவர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

அப்போது வீட்டின் நடுவில் ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜன் கொடுத்த தகவலின் பேரில் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், ராஜன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நபரை தட்டி எழுப்பி விசாரணை நடத்தினர். அதில் அவர் கருமத்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 48) என்பதும், திருட முயன்ற போது இருட்டில் தடுமாறி கீழே விழுந்ததும், போதையில் இருந்ததால் எழ முடியாமல் படுத்து தூங்கி விட்டதும் தெரியவந்தது. பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

You may also like

© RajTamil Network – 2024