திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு – 30-ஐ அமல்படுத்தி காவல் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம், காவல்துறையின் அனுமதி பெறாமல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் பரிகாரம்
திருப்பதி திருமலை பிரசாதமான லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேவஸ்தானம் திங்கட்கிழமை காலை சாந்தி ஹோமமத்தை நடத்தி தீட்டை கழித்தது. இதற்காக திருமலையில் மட்டுமல்லாமல் ஆந்திரத்தில் உள்ள புகழ் பெற்ற அனைத்து கோயில்களிலும் பிராயச்சித்த பூஜைகள் நடத்த அரசு முடிவு செய்தது.
ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் இதற்காக பரிகாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
இது வரும் அக்.2-ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நிறைவு பெறுகிறது. வரும் அக்.1-ஆம் தேதி அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு துணை முதல்வா் பவன் கல்யாண் வருகை புரிந்து, ஏழுமலையானை தரிசித்தபின் 11 நாள்கள் தீட்சையை நிறைவு செய்ய உள்ளாா்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்கிறாா் ஜெகன்: மாநிலம் முழுவதும் பரிகார பூஜை செய்யவும் அறிவுறுத்தல்
ஜெகன் மோகன் ரெட்டி பயணம்
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில்தான் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், வரும் சனிக்கிழமை பரிகாரப் பூஜை நடத்துவதற்காக ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கு பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காவல் சட்டப் பிரிவு – 30 அமல்
திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகளவில் திருமலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30-ஐ அக்டோபர் 24 வரை அமல்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணி, பொதுக் கூட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.