திருப்பதி லட்டு விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில் விடியோ வெளியிட்டிருந்த பரிதாபங்கள் குழு அந்த விடியோவை நீக்கி, மன்னிப்புக் கோரியுள்ளது.
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் விடியோ வெளியாகியிருந்தது.
சமூக வலைதளத்தில் இந்த விடியோ பலரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. லட்டு பரிதாபங்கள் விடியோவுக்கு எதிர்ப்புகள் அதிகமானதால், அந்த விடியோவை தங்கள் யூடியூப் பக்கத்திலிருந்து பரிதாபங்கள் குழு நீக்கியுள்ளது.
சர்ச்சையான விடியோ
பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் தலைப்பில் சமீபத்தில் விடியோ வெளியானது.
விடியோ வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கில் பார்வைகளை கடந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அந்த விடியோவை தங்களின் சேனலில் இருந்து அவர்கள் நீக்கியுள்ளனர்.
இது குறித்து பரிதாபங்கள் குழு தங்கள் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்… அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் யூடியூப் பக்கத்திலிருந்து இந்த விடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் இந்த விடியோ பலரால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படிக்க | வேட்டையன் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப் பச்சன் குரல்!
சமீபத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தைக் குறிப்பிட்டு பேசியதாக நடிகர் கார்த்திக்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி, மன்னிப்புக் கோரினார்.