Thursday, September 19, 2024

திருமண தடை நீக்கும் அம்மன்.. குமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற திருத்தலம்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

திருமணம் கைகூடாத பெண்கள் மற்றும் குழந்தையில்லா பெண்கள் இந்த கோவிலின் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.

குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பின்னர் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்ததும் நவராத்திரி விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விழாவில் குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சிலைகளும் பங்கேற்று வருகின்றன. ஆண்டுதோறும் இந்த 3 சாமி சிலைகளும் வெகுவிமரிசையான ஊர்வலத்துடன் திருவனந்தபுரம் சென்று வருகின்றன.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும்போது அம்மனுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள். மேலும் போலீசாரின் பேண்டு வாத்தியமும் இடம்பெறும்.

இத்தகைய சிறப்புமிக்க முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளக் கரையில் உள்ளது.

இந்த கோவில் தொடர்பான கதை சுசீந்திரம் தல புராணத்தில் உள்ளது. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய 3 பேரும் குழந்தை வடிவில் இருந்த தங்கள் கணவர்கள் மீண்டும் வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பு இருந்தபோது காட்சி கொடுத்த தாய்த் தெய்வம் இவள். கவுதமரின் சாபம் நீங்க இந்திரன் 300 கன்னியரை சாட்சியாக வைத்து பூஜித்தபோது தோன்றியவள் என்றும் கதைகள் கூறுகின்றன.

கோவில் வடக்கு பார்த்தது என்றாலும் தெற்கு வாசல் வழியே தான் பக்தர்கள் செல்ல முடியும். இதன் வழி சென்று தெற்கு வடக்காக அமைந்திருக்கும் கோவிலின் வடக்கு முன் மண்டபத்தை அடையலாம். கருவறையின் முன் அர்த்த மண்டபம் இருந்தாலும் முக மண்டபத்திலிருந்தே பக்தர்கள் இறைவியை தரிசிக்க முடியும். செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்படுகிறது.

நினைத்த காரியத்தை நிறைவேற்றுபவள் முன்னுதித்த நங்கை என்கிறார்கள் அந்த பகுதி பெண் பக்தர்கள். திருமண தடை மற்றும் குழந்தையில்லா பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள். பிறகு நேர்ச்சையாக உருவங்களையும், தொட்டில்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

மற்ற அம்மன் கோவில்களை போல் இங்கும் ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மனுக்கு வித, விதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

ஆடிப்பூர நன்னாள் அன்னை அவதரித்த புனித நாளாக கருதுவதால், அன்று முன்னுதித்த நங்கைக்கு சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் நவராத்திரியின் 9 நாட்களிலும் முன்னுதித்த நங்கைக்கு பலவித விசேஷ அலங்காரங்கள், பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற திருத்தலமான, முன்னுதித்த நங்கை கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

தாணுமாலயன் கோவிலின் திருவிழாவிற்கும், இந்த கோவிலுக்கும் இடையேயான உறவு காலங்காலமாக தொடருகிறது. தாணுமாலயன் கோவில் திருவிழா ஆங்காரபலி இங்கே தான் நடக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024