சுந்தரி தொடரில் அனு பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ கோபிகா. இவருக்கும், வருண் தேவ் என்பவருக்கும் நேற்று(அக். 7) குருவாயூரில் திருமணம் நடைபெற்றது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ கோபிகா. தற்போது, சுந்தரி தொடரின் 2ஆம் பாகத்திலும் பிரதானப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் டெல்டா டேவிஸ் விலகிய பிறகு, கண்மணி பாத்திரத்தில் ஸ்ரீ கோபிகா நாயகியாக நடித்து இருந்தார்.
இதையும் படிக்க: மகிழ்ச்சி செய்தியை அறிவித்த பிரபல சின்னத்திரை தம்பதி!
இதனிடையே, தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்த ஸ்ரீ கோபிகா, பின்னர், 'எனது முடிந்துபோன வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம்' என்று தெரிவித்து, அவருடன் நடந்த திருமண நிச்சய புகைப்படங்களை நீக்கி இருந்தார்.
இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நடைப்பெற்றதாகத் தெரிவித்து, திருமணப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவருக்கு வருண் தேவ் என்பவருடன் நேற்று குருவாயூரில் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீ கோபிகா – வருண் தேவ் திருமணத்தில் சுந்தரி தொடரில் பிரதானப் பாத்திரத்தில் நடிக்கும் ஜிஷ்னு மேனன் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேலும், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.