திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ல் விசிக வளர்ச்சிக்காக 200 பவுன் பொற்காசுகள் வழங்க ஏற்பாடு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ல் விசிக வளர்ச்சிக்காக 200 பவுன் பொற்காசுகள் வழங்க ஏற்பாடு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில், கட்சி வளர்ச்சிக்காக 200 பவுன் பொற்காசுகள் வழங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசிகவின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் ஆக.17-ம் தேதி, மாலை 4 மணியளவில் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா, புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் நடைபெறஉள்ளது.

விழாவில், விழுப்புரம் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் வீர.பொன்னிவளவன் வரவேற்புரையாற்றுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியை துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெ.குணவழகன் தொகுத்து வழங்குகின்றனர்.

காங்கிரஸ் புதுச்சேரி தலைவர்வெ.வைத்திலிங்கம் எம்.பி., மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கவுதம சிகாமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, விசிக ஊடக மைய மாநிலச் செயலாளர் பனையூர் பாபு எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

நிறைவாக கட்சியின் தலைவர்திருமாவளவன் ஏற்புரையாற்றுகிறார். அந்நிகழ்வில் கட்சி வளர்ச்சிக்கென 200 பவுன் பொற்காசுகளை வழங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024