திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் ரகளை செய்த டாக்டர்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரி உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024