நாம் தீண்டாமை உணர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அல்வார் நகரில் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ’அல்வாரின் கர சேவகர்கள்’ நிகழ்வில் பேசிய மோகன் பாகவத், “நாம் நமது மதத்தினை மறந்துவிட்டு சுயநலமாக இருக்கின்றோம். இதனால்தான் தீண்டாமை ஆரம்பமானது. சமூகத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எண்ணம் உருவானது. இனி, இந்த உணர்வினை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் மூலமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.
வங்கதேசத்தினா் ஊடுருவலால் பெரும் அச்சுறுத்தல்: ஜாா்க்கண்டில் பிரதமா் மோடி
கர சேவகர்கள் சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல், குடும்ப மதிப்பு, சுதேசி மற்றும் சமூகக் கடமைகள் போன்ற ஐந்து விஷயங்களைத் தங்களது வாழ்வுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். இதனை நமது தொண்டர்கள் வாழ்வுடன் இணைத்துக் கொண்டால், சமூகமும் இதனைப் பின்பற்றும்.
நமது சங்கம் அடுத்த ஆண்டில் 100-வது ஆண்டை எட்டுகிறது. நமது சங்கம் நீண்டகாலமாக பணி செய்து வருகிறது. நாம் பணியில் ஈடுபடும்போது அதன் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ”நமது தேசம் வலுப்பெற வேண்டும். இது இந்து தேசம் என்று நமது பிரார்த்தனையில் சொல்லி வருகிறோம். ஏனெனில், இந்த தேசம் உருவாகக் காரணம் இந்து சமுதாயம் தான். இந்த தேசத்திற்கு ஏதாவது நல்லது நடந்தால், இந்து சமுதாயத்தின் பெருமை உயரும். இந்த தேசத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அதன் பழி இந்து சமுதாயத்தின் மீது விழும்.
நம் நாடு பெருமையாகவும், தகுதியானதாகவும் மாறவேண்டும்.. நமது முழு சமூகமும் திறமையாக இருக்க வேண்டும்.
100-ஆவது நாளில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி: உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
நமது சங்கத்தை முன்பு யாரும் நம்பவில்லை. இன்று அனைவரும் இதை நம்புகின்றனர். நம்மை எதிர்ப்பவர்களும் கூட. அவர்களின் உதடுகள் நம்மை எதிர்த்தாலும், இதயங்கள் நம்மை நம்புகின்றன. எனவே, இப்போது நாம் தேசத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக இந்து மதம், இந்து கலாச்சாரம் மற்றும் இந்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்” என்று மோகன் பாகவத் பேசினார்.