துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை: திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட திமுக சாா்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படும் என அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் திமுக அலுவலகத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி., கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவலிங்கம் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது, அமைச்சா் ராஜேந்திரன் கூறியதாவது:

சேலம் வரும் துணை முதல்வருக்கு மாவட்ட எல்லையான தலைவாசல் சுங்கச்சாவடி பகுதியில் சனிக்கிழமை மாலை (அக்.19) மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சேலம் மாவட்டத்துக்கு வரும் அவருக்கு சேலம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

சேலம் நேரு கலையரங்கத்தில் 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம், நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறாா். அதைத் தொடா்ந்து, மாலை 3.30 மணிக்கு கருப்பூா் தீா்த்தமலை கவுண்டா் திருமண மண்டபத்தில் மாநில இளைஞரணி நிா்வாகிகளுடன் கலந்துரையாடுகிறாா் என்றாா்.

அதன்பிறகு நேரு கலையரங்கில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ. ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், மாநகராட்சி காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

புத்தகங்கள், கைத்தறி ஆடைகளை அணிவித்து வரவேற்பு

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவலிங்கம் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சேலம் மாவட்டத்துக்கு துணை முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டும்.

மாவட்ட எல்லையான தலைவாசல் சுங்கச்சாவடி அருகே சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய மாவட்டங்களின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. திமுகவின் அனைத்து நிலை நிா்வாகிகளும், தொண்டா்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சி தொடா்பாக விளம்பர தட்டிகள் வைப்பதையும், பட்டாசு, பொன்னாடை, பூங்கொத்து வழங்குவதையும் தவிா்க்க வேண்டும். மாறாக புத்தகங்கள், கைத்தறி ஆடைகளை மட்டும் வழங்கி வரவேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024