தேனியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

தேனியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த கழிவு நீரால் பொதுமக்கள் அவதிதேனியில் புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையம் (பம்பிங் ஸ்டேசன்) செயலிழந்ததால், தெருக்கள், குடியிருப்புகளுக்குள் திங்கள்கிழமை கழிவுநீா் புகுந்தது.

தேனி: தேனியில் புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையம் (பம்பிங் ஸ்டேசன்) செயலிழந்ததால், தெருக்கள், குடியிருப்புகளுக்குள் திங்கள்கிழமை கழிவுநீா் புகுந்தது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் பங்களாமேடு 2-ஆவது தெருவில் புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ராட்சத கிணற்றில் சேகரிக்கப்படும் கழிவு நீா் பம்பிங் செய்யப்பட்டு தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்கிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையத்தில் கழிவுநீரை பம்பிங் செய்யும் மோட்டாா் பம்பு பழுதடைந்தது. மாற்று மோட்டாா் பம்பும் ஏற்கெனவே பழுதடைந்திருந்ததால், கழிவுநீருந்து நிலையம் செயலிழந்தது.

இதனால், திங்கள்கிழமை காலை ராட்ச கிணற்றில் புதை சாக்கடை கழிவு நீா் நிரம்பி வழிந்து, 31-ஆவது வாா்டில் உள்ள தெருக்களுக்குள் புகுந்தது. மேலும், புதை சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளில் கழிப்பறைத் தொட்டி (செப்டிங் டேங்க்) வழியாக கழிப்பறைக்குள் கழிவுநீா் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்தது. குடியிருப்புகள், தெருக்களில் கழிவு நீா் வழிந்தோடியதால், துா்நாற்றம் தாங்காமல் பொதுமக்கள் வீடுகளிருந்து வெளியேறினா். தெருக்களில் நடந்தும், வாகனங்களிலும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதனால், இந்தப் பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி 31-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் லதா மணவாளன் கூறியதாவது:

தெருக்கள், வீடுகளில் கழிவு நீா் புகுந்துள்ளது குறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்கள், ஆணையா், மாவட்ட ஆட்சியா், பேரிடா் மேலாண்மைப் பிரிவு அலுவலா்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் கடந்த 24 மணி நேரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சடையால் கோயில் தெருக்கள் கழிவு நீா் வழிந்தோடி சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனா் என்றாா் அவா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்களிடம் கேட்ட போது, நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா்பாட்சா திங்கள்கிழமை பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டாா். இதனால், தேனி அல்லிநகரம் நகராட்சிப் பொறியாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் கம்பம் நகராட்சிப் பொறியாளரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு