நடுக்கடலில் மீனவர்களை அச்சுறுத்திய இலங்கை கடற்படை

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடிக்க முயன்றனர்.

ராமேசுவரம்,

இறால், நண்டு, கணவாய், சங்காயம், காரல் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நடுக்கடல் பகுதியில் மீன்பிடிக்க முயன்றனர். ஆனால் அங்கு 5 ரோந்து கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரிசையாக நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. உடனே மீனவர்கள் ராமேசுவரத்திற்கும், மண்டபத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் கூறும்போது, "ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்தும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இலங்கை கடற்படையினர் ஏராளமான ரோந்து கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். படகுடன் சிறைபிடித்து சென்று விடுவார்களோ என்று பயந்து, நமது எல்லை பகுதியில் மீன் பிடிக்காமல் திரும்பி வந்துவிட்டோம். இதனால் மிகவும் குறைந்த அளவிலான மீன்கள்தான் கிடைத்தன" என்று கூறினர்.

You may also like

© RajTamil Network – 2024