நாடாளுமன்றம் செல்லும் 5 பெண் தமிழக எம்.பி.க்கள்

by rajtamil
Published: Updated: 0 comment 39 views
A+A-
Reset

தேர்தலில் போட்டியிட்ட 77 பெண் வேட்பாளர்களில் தி.மு.க. சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பேரும் என 5 பேர் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு முறை அமலுக்கு வந்துள்ளது. இதேபோன்று சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இருந்தாலும் அவை முறையாக நடைமுறைக்கு இன்னும் வரவில்லை.

இதற்கிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 945 பேர் போட்டியிட்டதில் 77 பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். இது 8 சதவீதம் ஆகும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி (தி.மு.க.) வெற்றி பெற்றார்.

இதேபோல், தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் (தி.மு.க.), தென்காசி தொகுதியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (தி.மு.க), கரூரில் ஜோதிமணி (காங்கிரஸ்), மயிலாடுதுறை தொகுதியில் வக்கீல் சுதா (காங்கிரஸ்) ஆகிய 5 பேர் மட்டும் வெற்றி பெற்று உள்ளனர். இதில் தி.மு.க. சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பெண் வேட்பாளர்களும் ஆவார்கள்.

தமிழகத்தில் இருந்து 34 ஆண் எம்.பி.க்களும், 5 பெண் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர். தர்மபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி, தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024