நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிடுகிறார்.
இதையும் படிக்க : தீபாவளி: சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான வழிகள்…
இந்த நிலையில், வயநாட்டில் இன்று சாலையில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி மீனங்காடியில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
“நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான எதிர்காலம் இல்லை.
நீங்கள் கால்பந்தை விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் விளையாடுவதற்கு போதுமான வசதிகள் உங்களுக்கு இல்லை. அவை மேம்படுத்தப்பட வேண்டும்.
மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும் விளையாடுவதற்காக கடினமாக உழைக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
தீவிர பிரசாரம்
பிரியங்கா காந்தி இன்று 3 பொதுக் கூட்டங்களிலும், நாளை நான்கு பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
வயநாடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு மக்களவைத் தொகுதியில் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்தது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசும் வகையில் பிரியங்கா காந்தியின் பிரசாரத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.