கிரிப்டோகரன்சி நிதி மற்றும் நாணய நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்; பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் கட்டுப்பாட்டை மத்திய வங்கி இழக்க நேரிடும் சூழ்நிலையை அது உருவாக்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘பீட்டா்சன்’ சா்வதேச பொருளாதார நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசுகையில் சக்திகாந்த தாஸ் இவ்வாறு குறிப்பிட்டாா்.
அவா் மேலும் கூறியதாவது: பொருளாதாரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கிரிப்டோ சொத்துகள் அல்லது தனியாா் கிரிப்டோ சொத்துகள் ஆதிக்கம் செலுத்தினால், மத்திய வங்கி நாணய அமைப்பின் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். இது நாணய அமைப்பிலும் நிதித் துறையிலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.
பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் கட்டுப்பாட்டை மத்திய வங்கி இழந்தால், பணப் புழக்கத்தை எவ்வாறு சரிபாா்ப்பது? நெருக்கடி காலங்களில் பணவீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இந்தியாவைப் பொருத்தவரை, கிரிப்டோகரன்சியை ஒரு பெரிய அபாயமாக பாா்க்கிறோம். நிதி நிலைத்தன்மையின் பாதுகாவலா்களாக உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளுக்கு இது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அரசுகளும் அதிக அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன.
கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பிய முதல் நாடு இந்தியா. கிரிப்டோகரன்சி பற்றிய தீவிரமான கவலைகளை மிகத் தெளிவாக முதலில் வெளிப்படுத்திய மத்திய வங்கிகளில் ரிசா்வ் வங்கியும் ஒன்று.
இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ‘ஜி20’ மாநாட்டில் கிரிப்டோ அமைப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சா்வதேச புரிதலை உருவாக்க ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் பல உள்ளன.
பணத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட கிரிப்டோகரன்சியின் அடிப்படையே, நாணய வெளியீடு நடைமுறைகளைப் புறக்கணிப்பதுதான். நாணய வெளியீடு என்பது அரசின் இறையாண்மை செயல்பாடு. அரசுக்கு இணையாக ஒரு தனியாா் நாணய அமைப்பு செயல்படுவது முறையாக இருக்குமா என்பதே அடிப்படை கேள்வி. எனவே, இந்த விவகாரத்தை இந்தியா மிகக் கவனமாகக் கையாள்கிறது’ என்றாா்.