நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான ரகசியத்தை வாஷிங்டன் சுந்தர் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.
நியூசிலாந்து – 259/10
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
வெற்றியின் ரகசியம் பகிர்ந்த வாஷிங்டன் சுந்தர்
ரஞ்சி கோப்பையில் விளையாடியது நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட உதவியதாக சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரஞ்சி கோப்பையில் தில்லிக்கு எதிரான போட்டியில் விளையாடியது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது. ஏனென்றால், சிவப்பு பந்து போட்டிகளில் அவ்வப்போது விளையாடுவது மிகவும் சிறப்பானது. தில்லிக்கு எதிரான போட்டியின் மூலம், சிவப்பு பந்து போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தில்லிக்கு எதிரான போட்டியில் அதிக அளவிலான ஓவர்கள் வீசுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. தில்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட உதவியது. இந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். இந்த நாளை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாள் என்றார்.
இதையும் படிக்க: அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!
ரஞ்சி கோப்பையில் தில்லிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 152 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.