நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை – கர்நாடகா ஐகோர்ட்டு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பெங்களூரு,

அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆதர்ஷ் (வயது 50) என்பவர் அளித்த புகாரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், நடவடிக்கை எடுக்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க பெங்களூருவில் உள்ள மக்கள் பிரிதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் வசூலித்த புகாரில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தேர்தல் பத்திர பணம் வசூலிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.

பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். புகார்தாரருக்கு எதிராக அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை முறைகேடு புகார் இருந்தால் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கலாம். அதன் பின்னர் விசாரணை நடத்தப்படும். அடுத்த கட்ட விசாரணை வரும் 22-ம்தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024