கட்சி விரோத நடடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில், முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார் .
கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தனர். இன்றுகூட அதி கனமழை பெய்யும் என்றனர், ஆனால் வெய்யில் காய்கிறது.
குறைந்த மழைப்பொழிவிலும், சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி தத்தளித்தது. மக்கள் பாதிக்கப்படவில்லை என முதல்வர், துணை முதல்வர் பொய்யான தகவலைக் கூறிவருகின்றனர்.
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்து: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
20 செ.மீ மழை பெய்தாலும்கூட ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என முதல்வர், அமைச்சர்கள் கூறினார்கள். தற்போது, உண்மை நிலை வெளிவந்துவிட்டது. திமுக அரசு நீர்நிலைகளை முறையாக தூர்வாரவில்லை.
நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டதற்கான பதில் என துணை முதல்வர் கூறியது, அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது, விளையாட்டுத்தனமாக பேசுகிறார். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்படுவது ஜெயலலிதா காலத்திலேயே இருந்த நடைமுறைதான்.
அதிமுக இணைப்பு குறித்து 6 முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் பேசுவதாகக் கூறுவது பச்சைப் பொய். கட்சி விரோத நடடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் எனத் தெரிவித்தார்.