எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும் என தூய்மை பணியாளர்களிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் களத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகஸே் குமார், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்த விழாவின் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
'கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து ஊடகங்களிலும் மழை குறித்தான பேச்சுகள்தான் இருந்தது. சென்ற ஆண்டு, ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்தது. இந்தாண்டு முதலமைச்சர், அனைத்துத் துறை அமைச்சர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மழை பெய்தாலும் மூன்று மணி நேரத்திற்குள் தண்ணீரை அகற்ற வேண்டும், எங்கும் தண்ணீர் நிற்கக் கூடாது என உத்தரவிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.
இதுபோன்ற காலத்தில் நாங்கள் எப்போதும் களத்தில் இருந்துள்ளோம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் நாங்கள் களத்தில் இருக்கிறோம்.
ஒரு குழந்தையை அம்மா காலையில் குளிக்க வைத்து வெளியே அனுப்புவார்கள். ஆனால் அந்த குழந்தை வீட்டிற்கு வரும்போது சேறும், மண்ணுமாக வீட்டிற்கு வரும். அப்போது அந்த குழந்தை மீது அம்மாவிற்கு கோவம் வரும், ஆனால் அது செல்ல கோவம். அதுபோலவே நீங்களும் பணியாற்றுகிறீர்கள். சென்னைதான் அந்த குழந்தை, நீங்கள்தான்(தூய்மை பணியாளர்கள்) அதன் தாய்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | வெளிநாட்டு வேலை: சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தெலங்கானா இளைஞர்கள்!
மேலும், 'மழை பெய்த 12 மணி நேரத்தில் அதன் சுவடே தெரியாத அளவிற்கு பணியாற்றி உள்ளனர்.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும்.
இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் ஆகிய உங்களுக்கு மீண்டும் நன்கு பணி செய்ய வேண்டும் என்பதை நினைவு கூறும் வகையில் மொத்தமாக 1280 பேருக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்படுகிறது.
புடவை, கைலி, ரெயின்கோட், 5 கிலோ அரிசி, எண்ணெய், பால் பவுடர், மிளகாய் தூள் மற்றும் எதிர்பார்க்காத பரிசு தொகை ( 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ) இன்று வழங்கப்படுகிறது.
இது முடிவு அல்ல, இதுதான் ஆரம்பம், எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் களத்தில் நீங்கள் உள்ளீர்கள்' எனத் தெரிவித்தார்.