நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு தொழிற்சங்கத்தினர்  கடிதம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை: நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியிருப்பதாவது: “கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒப்பந்தபடியான ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. 22 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்குவதோடு, எதிர்காலத்தில் ஓய்வு பெறும் போதே ஓய்வு கால பலன்கள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 105 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் தரப்பில் பிரதானமாக முன்வைத்துள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது, வாரிசு வேலை வழங்குவது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பேசி ஊதிய ஒப்பந்தத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024