தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகம் – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காறறழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மஹாராஷ்டிரம் கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.13ல் காலை மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கக்கூடும்
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும்,
திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்..
திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தரிமபுரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தொடர்ந்து அக்.15 வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள்..
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 35.2 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோடு 18.6 டிகிரி செல்சியஸ் நிலவியது.