ஈரோடு,
ஈரோட்டில் விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பூபதி என்பவர் கடந்த 1-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் வீடு திரும்பிய சில நாட்களுக்கு பிறகு அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்ததில் தலையில் தையல் போட்ட இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை வைத்து தைத்திருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர், அறுவை சிகிச்சை மூலம் அந்த துணியை மருத்துவர்கள் அகற்றினர். இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூபதி புகார் அளித்துள்ளார்.