பட்டியலினத்தவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா பேசுகையில், “முந்தைய பசவராஜ் பொம்மை அரசு பட்டியலின உள் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதனை, தற்போதுள்ள காங்கிரஸ் அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர்கள் குழு விரைவில் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முந்தைய பாஜக அரசின் அமைச்சரவை சார்பில், பட்டியலினத்தவருக்கு உள் இடஒதுக்கீடு கோரிக்கை வைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதில், எஸ்சி (இடது) 6 சதவீதம், எஸ்சி (வலது) 5.5 சதவீதம், பஞ்சாரா, போவி, கோர்ச்சா, குருமா மற்றும் மற்ற பட்டியலினத்தவர்களுக்கு 4.5 சதவீதம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதையும் படிக்க: ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி! காங்கிரஸின் தோல்விக்கு காரணம்?
உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பில், சமூக ரீதியாக வேறுபட்ட வர்க்கமாக உள்ள பட்டியலின சாதிகளுக்கு உள் பிரிவுகளை உருவாக்க மாநிலங்களுக்கு அரசியலமைப்பின் படி அதிகாரம் உள்ளதாகவும், இதன் மூலம் சமூக மற்றும் கல்வி ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடு வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடக பாஜக சார்பில் சித்தராமையா தலைமையிலான அரசுக்கு உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.