Tuesday, September 24, 2024

பத்லாபூர் குற்றவாளி என்கவுன்டர்: இனிப்பு கொடுத்த கொண்டாடிய மக்கள்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தாணே: மகாராஷ்டிர மாநிலம், பத்லாபூா் நகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, மக்கள் இனிப்புக்கொடுத்து கொண்டாடினர்.

இரண்டு மழலையர் பள்ளிச் சிறுமிகளை, கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி அக்சய் ஷிண்டே நேற்று மாலை என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும், சிறுமிகள் வாழும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சாலைக்கு வந்து என்கவுன்டர் சம்பவத்தைக் கொண்டாடினர். பலர் இனிப்புகள் வாங்கி மக்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்த பலரும், குற்றவாளி என்கவுன்டர் செய்யப்பட்டதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறி கூச்சலிட்டனர்.

திங்கள்கிழமை மாலை, குற்றவாளி அக்சய், விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, காவல்துறையினரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்து, காவல்துறை ஆய்வாளர் நிலேஷ் மோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக, காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள், உள்ளூா் ரயில் நிலையத்தில் நடத்திய மறியல் போராட்டத்தால், இந்த விவகாரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

தாணே மாவட்டம், பத்லாபூரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுமிகள் அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக பள்ளி முதல்வா், வகுப்பு ஆசிரியா், பெண் பணியாளா் ஆகியோரை பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் கடும் கோபத்திலிருந்த பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள், பள்ளிக்கு வெளியே ஆா்ப்பாட்டம் செய்ததோடு, ரயில் மறியலிலும் ஈடுபட்டதால், மாநில அரசுக்கும் இந்த சம்பவம் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. இந்த நிலையில்தான் என்கவுன்டர் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளி அக்சய் ஷிண்டேவை, திங்கள்கிழமை மாலை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில் காவல்துறையினர் தலோஜா சிறையிலிருந்து அழைத்து வந்தனர். அவருடன் ஆயுதம் ஏந்திய நான்கு காவலர்களும் காவல் வாகனத்தில் உடன் வந்தனர். இந்த நிலையில்தான் தாணேவில் என்கவுன்டர் நடந்துள்ளது.

வாகனம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, குற்றவாளி, காவலரின் கைத்துப்பாக்கியை பிடுங்கி காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். காவலர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள திருப்பிச் சுட்டனர். இதில், அக்சன் சம்பவ இடத்தில் பலியானார். இரண்டு காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, காவல்துறை வாகனத்திலருந்து ரத்த மாதிரிகளும், துப்பாக்கித் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024