ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த ராணுவ வீரர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜம்மு – காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தீவிர கண்காணிப்பில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்களை வனப் பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க : ஜம்மு – காஷ்மீர்: 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!
அப்போது, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஒரு வீரர் மட்டும் தப்பி வந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இன்று அதிகாலை முதல் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அனந்த்நாக் வனப் பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட ராணுவ வீரரை சடலமாக பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
அவரது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் குறித்த தகவல்களை இந்திய ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
தொடர்ந்து, ராணுவ வீரரை கடத்திச் சென்று கொன்ற பயங்கரவாத கும்பலை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.