ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது குறித்து அவர் புகார் தெரிவித்ததற்கு விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
தில்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் இருந்த ஆம்லேட்டில் கரப்பான்பூச்சி இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான அவர், எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “உணவில் கரப்பான்பூச்சி இருப்பதை நான் காண்பதற்கு முன்னரே என்னுடைய 2 வயது மகன் பாதி உணவை உண்டிருந்தான். தற்போது இதனால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். இதனுடன், உணவை விடியோ, புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார்.
முடித் திருத்துபவர் செய்த மசாஜ்.. நரம்பு கிழிந்ததில் 30 வயது இளைஞருக்கு பக்கவாதம்!
இதற்கு எக்ஸ் தளத்தில் பதிவின் கீழ் மன்னிப்புக் கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் அவரது பயணம் குறித்தத் தகவல்களைக் கேட்டறிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தில்லியில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் பயணித்த பயணி அவருக்கு வழங்கப்பட்ட உணவில் ஒரு வெளிப் பொருள் இருந்ததாகப் பதிவிட்டிருந்தது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இதுதொடர்பாக கேட்டரிங் சேவை வழங்குபவரிடம் விசாரிக்கிறோம்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” தெரிவித்தார்.