பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 40 நாட்களுக்கு இருக்காது

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி தொடங்கியது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள். அதில் பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் அடிவாரத்தில் இருந்து 3 நிமிடத்தில் இயற்கை அழகை ரசித்தபடியே செல்வதால் ரோப்காரை பக்தர்கள் விரும்புகின்றனர்.

அதேபோல் மாதத்துக்கு ஒருநாள், வருடத்துக்கு ஒரு மாதம் என ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பழனி ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.

இதையொட்டி ரோப்கார் பெட்டிகள், கம்பி வடம் ஆகியவை கழற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தேய்மானமாகிய எந்திரத்தின் 'சாப்டு'கள் புதிதாக மாற்றப்பட உள்ளன.

பணியின் காரணமாக 40 நாட்கள் ரோப்கார் சேவை இல்லாததால் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவில் சென்று வரலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024