பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556க்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 150 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 267 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 267 ரன்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் பந்திலேயே கிரிஸ் வோக்ஸ் அதிர்ச்சியளித்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அப்துல்லா சபீக் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சைம் அயூப் 25 ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன் பின்னர் வழக்கம் போல பாபர் அசாம் 5 ரன்னிலும், சவுட் சகீல் 29 ரன்னிலும் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருந்தது. கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சல்மான் கான் அகா மற்றும் ஆமிர் ஜாமல் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
37 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து கிட்டத்தட்ட தோல்வி பாதையில் இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் அணி 115 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.
5-வது நாள் ஆட்டம் நாளை(அக்.11) நடைபெறும் நிலையில் இங்கிலாந்து அணி மிச்சமுள்ள 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் எளிதாக வெற்றியைப் பதிவு செய்யலாம்.