‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல்… போலீசில் பரபரப்பு புகார்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

சீரியல் நடிகர் சதீஷ்குமாருக்கு சூனியம் வைப்பதாக மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பிரபல சின்னத்திரை நடிகர் சதீஷ்குமார், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' என்ற சீரியலில் 'கோபி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர் கடந்த 2023-ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற அறுபடை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்மணி, நடிகர் சதீஷ்குமாருடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், அந்த அடையாளம் தெரியாத பெண்மணி சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து அந்த பெண் அடிக்கடி போனில் பேசி தொல்லை கொடுத்து வந்த நிலையில், அந்த எண்ணை சதீஷ்குமார் பிளாக் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பெண் குங்குமம் தடவிய எலுமிச்சை பழம் மற்றும் மாந்திரீகம் செய்யப்பட்ட பொருட்களை சதீஷ்குமாரின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு சூனியம் வைத்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக சதீஷ்குமார் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024